இந்திய வீடுகளில் அசைவ உணவுகளைச் சமைப்பதற்கு முன்பு அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவுவது நீண்டகாலப் பழக்கமாக உள்ளது. ஆனால், கோழி இறைச்சியை சமைக்கும் முன் கழுவுவது நன்மையை விட தீமையையே அதிகம் தரும் என்று உணவு பாதுகாப்பு நிபுணர்கள் இப்போது எச்சரிக்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் அமெரிக்க உணவு பாதுகாப்பு அமைப்பு (USDA) ஆகியவற்றின் கூற்றுப்படி, பச்சை இறைச்சியைக் கழுவும்போது அதில் உள்ள ‘சால்மோனெல்லா’ (Salmonella) மற்றும் ‘கேம்பிலோபாக்டர்’ (Campylobacter) போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் அழியாது. மாறாக, குழாய் அடியில் வைத்து இறைச்சியைக் கழுவும்போது, தண்ணீர் தெறிப்பதன் மூலம் அந்த கிருமிகள் ஒரு மீட்டர் தூரம் வரை உள்ள பாத்திரங்கள், மேடை மற்றும் உணவுகளில் பரவி நோய்த்தொற்றை உருவாக்குகின்றன.
View this post on Instagram
உணவு பாதுகாப்பு அதிகாரி அஹானா நஸார் இது குறித்துக் கூறுகையில், “இறைச்சியில் இரத்தம் அல்லது அழுக்கு தென்பட்டால் மட்டுமே அதைக் கழுவ வேண்டும். அப்போதும் குழாயைத் திறந்துவிட்டுக் கழுவாமல், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து அதில் மெதுவாக அலச வேண்டும். கைகளில் உறைகளை (Gloves) அணிவது சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
தண்ணீரால் பாக்டீரியாக்களைக் கொல்ல முடியாது. இறைச்சியை நன்றாக 75°C வெப்பநிலையில் சமைப்பதன் மூலம் மட்டுமே கிருமிகளை முழுமையாக அழிக்க முடியும். இறைச்சியைக் கையாண்ட பிறகு கைகளை சோப்பு போட்டு 20 வினாடிகள் கழுவுவதும், பயன்படுத்திய கத்திகள் மற்றும் பலகைகளைச் சுத்தம் செய்வதும் மிக அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
