அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்த மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறது. ஆனால், ஒரு சிலரின் பொறுப்பற்ற செயலால் அந்த உழைப்பும் பணமும் வீணாகிறது என்பதற்கு இந்த ஒரு வீடியோ சாட்சியாக அமைந்துள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் ‘X’ தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ, பார்க்கும் ஒவ்வொருவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

அதில், ஒரு முதியவர் புதிதாகப் போடப்பட்ட, இன்னும் காயாத தார்ச் சாலையின் மீது வேண்டுமென்றே தனது ஸ்கூட்டரை ஓட்டிச் செல்கிறார். இதனால் அந்தச் சாலை முழுவதும் டயர் தழும்புகள் ஏற்பட்டு, சாலை குண்டும் குழியுமாகச் சிதைகிறது. அருகில் இருந்த வழிப்போக்கர் ஒருவர் இதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்தும், அந்த முதியவர் அதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து சாலையைச் சேதப்படுத்திக் கொண்டே செல்கிறார்.

 

“அரசை மட்டும் குறை சொல்லி என்ன பயன்? மக்களிடம் குடிமை உணர்வு இல்லையென்றால் நாடு எப்படி முன்னேறும்?” என நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ இப்போது 47,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.