தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில், வங்கி ஊழியர்களுக்கான கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக 50 வயது செக்யூரிட்டி கார்டு கன்ஷியாம் என்பவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆரஞ்சு நிற சட்டை அணிந்த நபர் ஆத்திரத்துடன் வந்து செக்யூரிட்டியை கீழே தள்ளி விடுவதும், அவர் எழுந்திருக்கும்போது மீண்டும் தலையில் பலமாகத் தாக்குவதும் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்த கன்ஷியாம், நினைவாற்றல் இழப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு தற்போது ஐசியூ-வில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கார் எண் மற்றும் புகைப்படம் சரியாகக் கொடுக்கப்பட்டும், எஃப்ஐஆர்-இல்  தவறான வாகன எண் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் இதுவரை அந்த நபர் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அனுமதி இல்லாமல், யாரோ முன்பின் தெரியாதவர்கள் மருத்துவமனை பில்களைக் கட்டி வருவது, இந்த வழக்கை திசைதிருப்ப நடக்கும் முயற்சியோ என்ற அச்சத்தை உறவினர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

“>

 

ஏழைத் தொழிலாளி ஒருவருக்கு நேர்ந்த இந்த அநீதிக்கு நீதி கேட்டு சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.