மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வந்த முக்கியமான உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், ஆடுகளம் மிகவும் மோசமாகவும் ஆபத்தான முறையிலும் இருந்ததால் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சர் விவ் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் லீவர்ட் ஐலேண்ட்ஸ் மற்றும் டிரினிடாட் & டொபாகோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, சர்வதேச வேகப்பந்து வீச்சாளர் ஜேடன் சீல்ஸ் வீசிய ஒரு அதிவேக பவுன்சர் பந்து, பேட்டர் ஜெரேமியா லூயிஸின் ஹெல்மெட்டை பலமாகத் தாக்கியது. பந்து பட்ட வேகத்தில் அவர் நிலைகுலைந்து மைதானத்திலேயே சுருண்டு விழுந்த சம்பவம் அங்கிருந்த வீரர்களிடையே மரண பயத்தை ஏற்படுத்தியது.

சிறிது நேரத்திற்குப் பிறகு எழுந்த லூயிஸ், ஆத்திரத்தில் தனது ஹெல்மெட்டை காலால் எட்டி உதைத்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அந்தப் போட்டியை உடனடியாக ரத்து செய்து ‘டிரா’ ஆனதாக அறிவித்தது.

காயமடைந்த லூயிஸ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது அவர் நலமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளம் மிகவும் ஆபத்தான முறையில் பந்தை எழும்பச் செய்ததே இந்த அசம்பாவிதத்திற்கு முக்கியக் காரணம் என கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.