ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள கால குவான் சேட்டிலைட் அரசு மருத்துவமனையில், மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை, கேதர் குர்ஜார் என்ற நோயாளி கடந்த மூன்று நாட்களாக அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அவரை உள்நோயாளியாக அனுமதிக்க நர்சிங் அதிகாரி ரச்சனா சோனி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ரச்சனா, “நான் 100 பேரை வரவழைத்து உன்னை அடிக்கச் சொல்லுவேன், என்னை யார் என்று நினைத்தாய்?” எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, நோயாளி மருத்துவமனை மேலாளரிடம் புகார் அளித்த பின்னரே அவருக்குப் படுக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் தேநீர் குடிக்கச் சென்ற ஒரு மணிநேரத்தில், அவரது படுக்கை வேறொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. “உனக்கு இங்கே பெட் இல்லை, வெளியே போ” என ரச்சனா சோனி அவரை டிஸ்சார்ஜ் செய்ததால், காய்ச்சலில் தவித்த அந்த நோயாளி சிகிச்சையின்றி வீடு திரும்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளி நியாயம் கேட்டுப் போராடி வருகிறார்.