தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், வரும் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க விஜய் வாகனத்தில் வந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் அரங்கேறியது. சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, கூட்டத்திலிருந்து திடீரென வெளியே வந்த இளைஞர் ஒருவர், விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு மிக அருகில் சென்று வழிமறிப்பது போலச் செயல்பட்டார். இந்தக் திடீர் செயலால் விஜய்யின் பாதுகாப்புப் பணியில் இருந்த பவுன்சர்கள் மற்றும் காவல்துறையினர் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பவுன்சர்கள், அந்த இளைஞரை வாகனத்திற்கு முன்பிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

 

ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு மத்தியில், தனது தலைவனை மிக அருகில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அந்த இளைஞர் செய்த இந்தச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், விஜய் புன்னகையுடன் கைகாட்டி ரசிகர்களை அமைதிப்படுத்திய பின் வாகனம் மெதுவாகக் கடந்து சென்றது. இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.