ஹைதராபாத் – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீசரா டோல் பிளாசா அருகே சனிக்கிழமை அன்று நடந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமராவதியில் நடந்த பார கவுன்சில் தேர்தலில் பங்கேற்று விட்டு, தனது சிவப்பு நிற பிஎம்டபிள்யூ காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூத்த வழக்கறிஞர் சீனிவாச ராவ், இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

அதிவேகமாக வந்த கான்கிரீட் கலவை ஏற்றிய டேங்கர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வழக்கறிஞரின் கார் மீது அப்படியே சரிந்து விழுந்தது. இதில் அந்த சொகுசு கார் அப்பளம் போல் நசுங்கியதுடன், வழக்கறிஞர் சீனிவாச ராவ் உள்ளேயே சிக்கி உடல் நசுங்கி பலியானார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் சுமார் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வழக்கறிஞரின் உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், திருப்பத்தில் திரும்பும்போது லாரியில் ஏற்பட்ட பிரேக் பழுது காரணமாகவே இந்த விபத்து நேரிட்டதாகத் தெரியவந்துள்ளது.

இது குறித்து விஜயவாடா போலீஸ் கமிஷனர் எஸ்.வி.ராஜா சேகர பாபு கூறுகையில், “சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்; லாரியில் அதிக பாரம் ஏற்றப்பட்டதா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. ஒரு வழக்கறிஞர் தேர்தல் முடிந்து திரும்பியபோது உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.