இந்திய எல்லைப் பகுதிகளில் இந்தியா ஏதேனும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விடுத்த மிரட்டலுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அன்று மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

55 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாகப் பிரிந்த வரலாற்றுச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் இத்தகைய தூண்டுதல் பேச்சுகளைப் பேசக்கூடாது என்றும் ஒருவேளை அவர்கள் மேற்கு வங்கத்தின் மீது ஒரு தீய பார்வையைச் செலுத்த முயன்றால் இந்த முறை அந்த நாடு எத்தனை துண்டுகளாகச் சிதறும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும் என்றும் அவர் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பிடியில் உள்ள சில நபர்களைப் பயன்படுத்தி இந்தியா போலியான தாக்குதல் நாடகங்களை நடத்தக்கூடும் என்றும் அதற்குப் பதிலடியாகத் தாங்கள் கொல்கத்தா வரை தாக்குதலை முன்னெடுப்போம் என்றும் கவாஜா ஆசிப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

இதற்கு முன்னதாக இந்தியாவிற்கு எதிராகப் பாகிஸ்தான் ஏதேனும் தவறான முயற்சிகளில் ஈடுபட்டால் அதற்குத் தீர்மானமான மற்றும் முன் எப்போதும் இல்லாத அளவிற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நான்கு நாட்கள் மோதல் நீடித்தது குறிப்பிடத்தக்கது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வார்த்தைப் போர் முற்றியுள்ளது எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.