கர்நாடக மாநிலம் ராமநகர மாவட்டம் ராயரதொட்டி கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி பார்வதம்மாள், கடந்த சில தினங்களுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாகக் காலமானார். கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் உள்ள குரங்குகளுக்குத் தனது பிள்ளைகளைப் போலப் பாசத்துடன் உணவளித்து வந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் குரங்குத் தொல்லை குறித்துப் புகார் அளித்தபோதும், அவற்றின் பசியைப் போக்குவதையே தனது கடமையாகக் கொண்டிருந்தார் பார்வதம்மாள். இந்நிலையில், மார்ச் 30-ஆம் தேதி அவர் மறைந்த செய்தி கேட்டு, அவர் வளர்த்த பாசம் அந்த வாயில்லா ஜீவன்களைத் தேடி வரவழைத்துள்ளது.

​வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பார்வதம்மாளின் உடலைப் பார்த்த ஒரு குரங்கு, துடிதுடித்துப் போய் அவர் மீது விழுந்து கதறியது. அவரது முகத்தில் தனது தலையை வைத்து அழுததுடன், பிரிய மனமில்லாமல் அவரது உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்ட அந்தத் தத்ரூபமான காட்சி பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியது.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான இந்த அசாத்தியமான பிணைப்பைக் காட்டும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “நன்றி உணர்வின் உச்சம் இதுதான்” என நெட்டிசன்கள் பலரும் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.