மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சில சமூக விரோதிகள் சிலிண்டர்களைப் பதுக்கி வைப்பதும் திருடிச் செல்வதுமான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்தச் சூழலில் மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற விமல் குமார் என்பவரது வீட்டில் அரங்கேறியுள்ள துணிகரத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி விமல் குமார் தனது வீட்டுத் தேவைக்காக நான்கு சிலிண்டர்களை வீட்டு வாசலில் வைத்துள்ளார்.

கடந்த 14ம் தேதி நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த நான்கு சிலிண்டர்களையும் லாவகமாகத் திருடிச் சென்றுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முன்னாள் நீதிபதி வீட்டிலேயே எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டிருப்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்தக் கும்பலைத் தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.