இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள டீன்ஸ்கேட் பகுதியில், நள்ளிரவில் கபாப் (Kebab) சாப்பிட ஆசைப்பட்ட ஒரு நபருக்கு நேர்ந்த கதி இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், கபாப் ஆர்டர் செய்வதற்காக அங்கிருந்த ஒரு பழைய டெலிபோன் பூத்திற்குள் நுழைந்துள்ளார். ஆனால், அவர் உள்ளே சென்ற அடுத்த நொடியே அந்த கனமான கதவு தானாகவே லாக் ஆகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்த பூத்திற்குள் இருந்த போன் வேலை செய்யவில்லை என்பது அவருக்கு அப்போதுதான் தெரிந்தது.

​உள்ளே சிக்கிக்கொண்ட நண்பரை வெளியே எடுக்க அவரது நண்பர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடியும் பலனில்லை. வேடிக்கை பார்த்தவர்கள் வீடியோ எடுக்க ஆரம்பிக்க, அந்த நபர் பூத்தின் அடியிலிருந்த கண்ணாடியை உடைத்து வெளியே வர முயன்றும் தோல்வியடைந்தார். இறுதியில் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் வந்து பூத்தின் கதவை உடைத்து அந்த நபரை மீட்டனர். “கடைசியில் அவருக்கு அந்த கபாப் கிடைத்ததா?” என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.