உத்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியை மது குமாரி என்பவர் வகுப்பறையிலேயே மாணவிகளைக் கொண்டு மசாஜ் செய்துகொண்ட அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை வகுப்பறையில் தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு அலைபேசியைப் பார்த்தவாறு இருக்க அங்கு பயிலும் மாணவிகள் அவரது கை மற்றும் கால்களைப் பிடித்து மசாஜ் செய்யும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.

 

குறிப்பாக அந்தப் பள்ளி மண்டல கல்வி அதிகாரி அலுவலகம் அமைந்துள்ள அதே வளாகத்திலேயே செயல்பட்டு வரும் நிலையில் இத்தகைய ஒழுங்கீனமான செயல் அரங்கேறியிருப்பது கல்வித் துறை அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாட்டையே காட்டுவதாகப் பெற்றோர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி இது குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களைக் கொண்டு இத்தகைய வேலைகளை வாங்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. கல்வி பயில வரும் மாணவர்களைத் தனது சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திய ஆசிரியைக்கு எதிராகத் தற்போது இணையத்தில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.