மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதிப் போட்டியின் போது, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இடையே நடந்த வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மைதானத்தின் ஓரத்தில் குல்தீப்பை சந்தித்த ரோஹித், அவரை கட்டிப்பிடிக்க முயன்றபோது குல்தீப்பின் டி-சர்ட்டில் ஏதோ ஒரு கறை அல்லது அடையாளத்தைக் கவனித்தார்.

உடனே சிரித்துக்கொண்டே பின்வாங்கிய ரோஹித், அதைச் சுட்டிக்காட்டி குல்தீப்பை கிண்டல் செய்ய, அந்த இடமே கலகலப்பானது. இவர்களின் இந்த நட்பு ரீதியான கிண்டல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதேபோல், போட்டி தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, இந்திய வீரர் சஞ்சு சாம்சன் முன்னால் நின்றிருந்த ஒரு சிறுமி, கண்களை மூடி கை கூப்பி மிகுந்த தேசப்பற்றுடன் பாடிய காட்சி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கியூட் வீடியோவை பார்த்த பலரும் அந்த சிறுமியின் தேசப்பற்றைப் பாராட்டி வருகின்றனர்.