உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10,000 கிலோ காலாவதியான பேரிச்சம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பேரிச்சம் பழங்கள் அனைத்தும் கடந்த 2022-ஆம் ஆண்டிலேயே காலாவதியானவை (Expired) என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பல், காலாவதியான பழைய பேரிச்சம் பழப் பாக்கெட்டுகளின் மீது, 2026-ஆம் ஆண்டு வரை காலாவதி தேதி இருப்பது போன்ற போலி ஸ்டிக்கர்களை ஒட்டி சந்தையில் விற்கத் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

ரமலான் மாதம் நெருங்கி வரும் வேளையில், பேரிச்சம் பழங்களின் தேவை அதிகரிக்கும் என்பதைப் பயன்படுத்தி இந்த விபரீத லாப நோக்கோடு அவர்கள் செயல்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பேரிச்சம் பழங்களின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.