பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மீது தெரு நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கிய நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோவில், பள்ளிப் பைகளைச் சுமந்தபடி சாலையில் நடந்து சென்ற இரு சிறுவர்களில் ஒருவரை அந்த நாய் திடீரெனத் துரத்தத் தொடங்கியது.

பயத்தில் அண்ணன் ஓட முயன்றபோது, அந்த நாய் பின்னால் வந்த தம்பியைப் பிடித்துக் கீழே தள்ளித் தாக்கத் தொடங்கியது. தனது தம்பி ஆபத்தில் இருப்பதைக் கண்டு துடித்த அண்ணன், சிறிதும் அஞ்சாமல் மீண்டும் ஓடி வந்து நாயிடமிருந்து தம்பியை மீட்கப் போராடினான். இந்தத் தாக்குதலில் சிறுவனின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், அவனைக் காப்பாற்ற முயன்ற அண்ணனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

 

இந்தச் சம்பவம் குறித்துப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தெரு நாய்களின் எண்ணிக்கை நகர்ப்புறங்களில் அதிகரித்து வருவது பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.

தம்பியைத் தன்னலமின்றிப் போராடிக் காப்பாற்றிய அந்தச் சிறுவனின் வீரத்தைப் பலரும் பாராட்டி வரும் அதே வேளையில், தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.