உத்தரப்பிரதேச மாநிலம் மார்க்காபூர் பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு, உள்ளூர் முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் சென்று வழிபாடு நடத்தினார். மத நல்லிணக்கத்தைப் பேணும் நோக்கில் அவர் அங்கு சென்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் அங்கிருந்து சென்ற பிறகு சில பாஜக தொண்டர்கள் மற்றும் இந்து அமைப்பினர் அந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் குறிப்பிட்ட அந்த சட்டமன்ற உறுப்பினர் அமர்ந்திருந்த இடத்திலும், அவர் நடந்து சென்ற பாதையிலும் ‘கோமியம்’ தெளித்து ‘சுத்தம்’ செய்துள்ளனர். மாற்று மதத்தைச் சேர்ந்தவர் கோவிலுக்குள் வந்ததால் தலம் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டது அங்கிருந்தோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“>

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒருபுறம், ஒரு மக்கள் பிரதிநிதி அனைத்து மதத்தினரையும் மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கோவிலுக்குச் சென்றதைச் சுட்டிக்காட்டி பாஜகவினரின் இந்தச் செயல் மதவெறுப்பைத் தூண்டும் விதமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மறுபுறம், இது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் தங்களது மதச் சடங்கு என்று பாஜக தரப்பினர் நியாயப்படுத்துகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் சவாலாகத் தென்படும் இத்தகைய நிகழ்வுகள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.