சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்று முதலில் அறிவித்த பாகிஸ்தான் அரசு, தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி தனது அணிக்கு அனுமதி அளித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்பது தொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் ஐசிசி அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

 

முதலில் வங்கதேசத்திற்கு ஆதரவாகப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் பிடிவாதம் பிடித்தாலும், ஐசிசி தரப்பில் விதிக்கப்பட வாய்ப்புள்ள கடும் அபராதம் மற்றும் பொருளாதார இழப்புகளைக் கருத்தில் கொண்டே அந்நாட்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பத்திரிகையாளர் ஒருவர் ஐசிசி-யைப் பாகிஸ்தான் பணியவைத்துவிட்டதாகப் புகழ்ந்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகழுரையைக் கேட்டு நக்வி அமைதியாக இருந்தாலும், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது பாகிஸ்தானின் நிலையை அம்பலப்படுத்துவது போல் அமைந்தது.

இந்தியாவின் அச்சுறுத்தல் காரணமாகத் தொடரில் இருந்து நீக்கப்பட்ட வங்கதேசத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராடியதாகப் பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஐசிசி-யின் நெருக்குதலுக்குப் பயந்தே அவர்கள் இந்த ‘யு-டர்ன்’ முடிவை எடுத்துள்ளதாகக் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.