“எந்த ஒரு தொழிலும் சிறியது அல்ல, அதைத் திறம்படச் செய்தால் கைநிறையச் சம்பாதிக்கலாம்” என்பதை மெய்ப்பிக்கும் வகையில், நளினி உனாகர் என்ற பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது வீட்டுக்கு அருகே உள்ள டிரை கிளீனிங் கடை உரிமையாளரிடம் நளினி பேசியபோது, அந்த தம்பதியினர் தங்களுக்கு மாதம் 2 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைப்பதாகக் கூறி அதிர்ச்சியளித்துள்ளனர்.

நாளொன்றுக்கு சுமார் 350 துணிகளை அயர்ன் செய்வது மற்றும் விலை உயர்ந்த ஆடைகளை டிரை கிளீனிங் செய்வதன் மூலம் தினமும் 10,500 ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாகவும், ஆட்கள் கூலி மற்றும் மின்சாரக் கட்டணம் போக மாதம் 2.37 லட்சம் ரூபாய் நிகர லாபமாக கைக்கு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், “ஐடி நிறுவனங்களில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மேலாளர்களின் சம்பளத்தை விட இது அதிகமா இருக்கே!” என ஆச்சரியம் தெரிவித்து வரும் நிலையில், சிலர் இவ்வளவு வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வரி செலுத்துகிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.