உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோகா தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி ஒன்று திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த லாரியில் அதன் கொள்ளளவை விட இரண்டு மடங்கு அதிகமாக கரும்பு கட்டுகள் ஏற்றப்பட்டிருந்ததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

லாரி ஒருபுறமாக சாய்ந்தபடி ஆபத்தான முறையில் செல்வதைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதனைத் தங்களது அலைபேசியில் காணொலியாகப் பதிவு செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லாரி சாலையின் நடுவே கவிழ்ந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்தச் சமயத்தில் அருகில் வேறு வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

போக்குவரத்து விதிகளை முற்றிலுமாகப் புறக்கணித்து அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றிச் சென்றதே இந்த விபத்திற்குக் காரணம் என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் சாலை ஓரத்தில் இருந்த வீடுகள் மற்றும் கடைகளுக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.