உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், பணத்திற்காகத் தனது மனைவியையே நண்பர்களிடம் ஒப்படைத்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அளித்த புகாரின்படி, கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி எரிவாயு அடுப்புக்கான ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும் என்று கூறி கணவர் அவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

வழியில் அவரது நண்பர்கள் இருவர் ஏற்கனவே காத்திருந்த நிலையில், அங்கு வைத்துத் தனது மனைவியை வெறும் ஆயிரம் ரூபாய்க்கு நண்பர்களிடம் விற்க கணவர் பேரம் பேசியுள்ளார். பின்னர் தான் மட்டும் ஒரு வேலை நிமித்தமாகச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் செல்லுமாறு மனைவியை அனுப்பி வைத்துள்ளார்.

வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அந்த நபர்கள் இருவரும் பெண்ணைத் தனிமையான காட்டுப்பகுதிக்குக் கடத்திச் சென்று, அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்த பெண் இது குறித்துத் தனது கணவரிடம் கேட்டபோது, “உன்னை வைத்து இப்படித்தான் பணம் சம்பாதிப்பேன்” என்று அவர் திமிராகப் பதிலளித்துள்ளார்.

இதனால் நிலைகுலைந்து போன அந்தப் பெண், தனது மைத்துனரிடம் நடந்தவற்றைக் கூறிவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.