ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் புகழ்பெற்ற சூரஜ்குண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் மேளா நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மாலை சுமார் 6:15 மணியளவில், மக்கள் உற்சாகமாக ராட்சத ஊஞ்சலில் (Giant Wheel) விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஊஞ்சலின் ஒரு பகுதி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் பிரசாத், விபத்தைக் கண்டதும் சற்றும் யோசிக்காமல் மக்களைக் காப்பாற்ற விரைந்து சென்றார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊஞ்சலின் ஒரு கனமான பகுதி அவர் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்து அவர் வீரமரணமடைந்தார். ​இந்தக் கொடூர விபத்தில் இரண்டு பெண் போலீசார் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். “தினமும் ஊஞ்சல்கள் முறையாகப் பரிசோதிக்கப்படுகின்றன” என்று நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டாலும், இந்த விபத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். அலட்சியமாகச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தச் சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு விழாக்கோலத்தில் இருந்த மேளா, ஒரு போலீஸ் அதிகாரியின் உயிரைத் தியாகம் செய்த இடமாக மாறியது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.