இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, விராட் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி மைதானத்திற்குள் நுழைந்து கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார். உடனடியாக விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரி அந்த ரசிகரைப் பிடித்து பலவந்தமாக வெளியேற்ற முயன்றார்.

அப்போது அந்த அதிகாரி ரசிகரின் முகத்தில் அறைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த விராட் கோலி, “அவரை அடிக்க வேண்டாம், மென்மையாக கையாளுங்கள்” என்று சைகை மூலம் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், கோலியின் அந்த கோரிக்கையை பொருட்படுத்தாத பாதுகாப்பு அதிகாரி, அந்த ரசிகரைத் தொடர்ந்து தாக்கியபடி மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் சென்றார்.

“>

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்திற்குள் அத்துமீறி நுழைவது தவறு என்றாலும், ஒரு நட்சத்திர வீரரே அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்ட பிறகும், பாதுகாப்பு அதிகாரி ஒரு ரசிகரைத் தாக்கிய விதம் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம், வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். விராட் கோலியின் மனிதாபிமான செயலும், பாதுகாப்பு அதிகாரியின் ஆக்ரோஷமான போக்கும் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.