சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல், பெரும் வன்முறையாக மாறியது. இதில் பாஜக நிர்வாகி காயமடைந்த நிலையில், இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில், பொங்கல் தின சிறப்பு விவாத நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன், பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பத்திரிகையாளர் செந்தில்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விவாதத்தின் போது, பத்திரிகையாளர் செந்தில்வேல் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த பாஜகவினர் அவருக்கு இடையூறு செய்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அவர், நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது, அங்கு திரண்டிருந்த ஒரு கும்பல் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக குண்டர்கள் என் மீதும், என்னைப் பாதுகாக்க வந்த நிர்வாகிகள் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதலுக்கு வசதியாக 10 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போலீஸார் முன்னிலையிலேயே இந்த வன்முறை அரங்கேறியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் காயமடைந்த பாஜக நிர்வாகி பாரதி கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள வீடியோவில், “திமுகவின் கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல் பாஜகவினர் ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டனர். ஜனநாயக ரீதியாக விவாதிக்க அவர்கள் தயாராக இல்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜகவினர் அநாகரிகமாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. ஆனால், அதற்கு எதிர்வினையாக திமுகவினர் ஆட்களைத் திரட்டி வந்து வன்முறையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஜி.சூர்யாவிடம், வேப்பேரி போலீஸார் நேரில் சென்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். பாஜக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற விவாதத்தில் ஏற்பட்ட இந்த மோதல் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்திற்கு பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பலரும் வீடியோவோடு கண்டனம் தெரிவித்துள்ளனர்.