ராஜஸ்தான் மாநிலத்தின் கிராமப்புறத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரின் மூக்கிலிருந்து உயிருடன் இருந்த அட்டைப்பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அந்தச் சிறுமிக்கு மூக்கில் கடுமையான வலியும், அடிக்கடி ரத்தக் கசிவும் ஏற்பட்டு வந்துள்ளது.

 

சாதாரண பாதிப்பு என முதலில் எண்ணிய குடும்பத்தினர், வலி குறையாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியின் மூக்கைச் சோதித்த மருத்துவர்கள், உள்ளே ஏதோ ஒரு உயிரினம் நகருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மூக்கினுள் நீரை ஊற்றி, இடுக்கி ஒன்றின் மூலம் சுமார் மூன்று அங்குல நீளமுள்ள உயிருள்ள அட்டைப்பூச்சியை வெளியே எடுத்தனர்.

கால்நடைகளை மேய்க்கச் செல்லும்போது அசுத்தமான நீர்நிலைகளில் முகம் கழுவியபோது அட்டைப்பூச்சி அல்லது அதன் முட்டைகள் மூக்கினுள் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இச்சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கிராமப்புறங்களில் பாதுகாப்பற்ற நீர்நிலைகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.