பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசு விழாவொன்றில் இஸ்லாமியப் பெண் ஒருவரின் ஹிஜாபை இழுத்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகத்திற்குப் பேட்டியளிக்க சமாஜ்வாடி கட்சித் தலைவரும் கவிஞர் முனவ்வர் ராணாவின் மகளுமான சுமையா ராணா திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இந்த விவகாரம் குறித்துப் பேட்டி கேட்டபோது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அண்டை நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் பதிலளித்தார். புகழ்பெற்ற கவிஞர் ஜிகர் முராதாபாடியின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், “வீட்டுப் பிரச்சினைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது” என்று அந்தச் செய்தியாளருக்குப் பதிலடி கொடுத்தார்.

 

இந்தியாவில் அனைவரும் அமைதியாக வாழ்வதாகவும், ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவற்றை நாங்கள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வோம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். நிதிஷ் குமார் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி ஆயுஷ் மருத்துவர்களுக்குப் பணி ஆணை வழங்கும் போது பெண் ஒருவரின் ஹிஜாபை விலக்கிய வீடியோ நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக லக்னோ காவல் நிலையத்தில் சுமையா ராணா புகார் அளித்துள்ளதோடு, உக்ரைன் மற்றும் ரஷியப் போர் போன்ற சர்வதேச சூழல்களுக்கு நடுவே இத்தகைய செயல்கள் சமூக பதற்றத்தை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதே விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் மீதும் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் உள்நாட்டு அமைதியைக் காப்பதில் அரசியல் ரீதியான வேறுபாடுகளைத் தாண்டி, வெளிநாட்டுத் தலையீட்டை எதிர்த்து சுமையா ராணா எடுத்துள்ள இந்த நிலைப்பாட்டைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.