உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், திருமணமான பெண்ணின் சூழ்ச்சியால் பொய் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்த 25 வயது பொறியாளர் அபிஷேக் ஸ்ரீவஸ்தவா, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது வீட்டின் அருகில் வசித்து வந்த சோனல் சிங் என்ற திருமணமான பெண்ணுடன் நட்பாக இருந்துள்ளார்.

 

இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண் மற்றும் அவரது கணவர் அஜித் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து, அபிஷேக்கை மிரட்டி கடந்த ஆறு மாதங்களில் சுமார் 7 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர். தன்னிடம் இருந்த பணத்தைப் பறிப்பதே அந்தப் பெண்ணின் நோக்கம் என்பதை உணர்ந்த அபிஷேக், அவரிடமிருந்து விலக முயற்சித்துள்ளார்.

ஆனால், அந்தப் பெண் அபிஷேக் மீது ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டுவதாகப் பொய் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த பின்னரும், அந்தத் தம்பதியினர் வழக்கைத் திரும்பப் பெற 10 லட்சம் ரூபாய் கேட்டு அபிஷேக்கிற்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.

சொத்துக்களை விற்றாவது தங்களுக்குப் பணம் தர வேண்டும் என்று அவர்கள் மிரட்டியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அபிஷேக், தனது அறையில் உள்ள சுவர்கள் முழுவதும் அந்தப் பெண்ணுடன் பேசிய வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் வீடியோ அழைப்புப் பதிவுகளின் 35 நகல்களை ஆதாரமாக ஒட்டி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தனது சாவுக்கு அந்தத் தம்பதியே காரணம் என்று அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தை மீட்டுள்ள கோட்வாலி போலீசார், தற்கொலைக்குத் தூண்டியதாக சோனல் சிங் மற்றும் அஜித் சிங் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.