ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள புகழ்பெற்ற மகரிஷி தயானந்த பல்கலைக்கழக வளாகத்திற்குள், குண்டர்கள் சிலர் தோட்டாக்கள் துளைக்காத ஸ்கார்பியோ காரில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த விக்ரம் மற்றும் அவரது கூட்டாளிகள், பழிவாங்கும் நோக்கில் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

 

காரை வேகமாகச் செலுத்தி மாணவர்களை மோத முயன்ற போது, அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். இருப்பினும், விடாமல் துரத்திய அந்தக் கும்பல் காரால் மோதியதில் ஒரு மாணவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஒன்று திரண்டு கற்களைக் கொண்டு கார் மீது தாக்குதல் நடத்தியதால், பயந்துபோன அந்தக் கும்பல் காரை அதிவேகமாகச் செலுத்தி அங்கிருந்து தப்பியது.

அவ்வாறு தப்பியோடும் போது வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பல கார்களைச் சேதப்படுத்தினர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காவல்துறையினர் இருவரைக் கைது செய்து காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.