தில்லி-மும்பை விரைவுச்சாலையில் கடந்த வாரம் விபத்தில் சிக்கி உருக்குலைந்த காருக்குள் 8 மணி நேரம் சிக்கித் தவித்த தில்லி தம்பதியான லச்சி ராம் (42), குசும் லதா (38) ஆகியோர் உயிரிழந்த சம்பவம், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் அலட்சியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

தம்பதி பயணித்த கார் 22 நிமிட இடைவெளியில் இருமுறை லாரிகள் மோதிய விபத்தில் சிக்கி நசுங்கியபோதும், எந்த ஓட்டுநரும் நிற்கவில்லை. மேலும், பலர் கடந்து சென்றும் யாருமே உதவிக்கு நிற்காததால், தம்பதி ரத்தம் வடிந்த நிலையில் காருக்குள் உயிரிழந்துள்ளனர்.

“ஒவ்வொரு மணி நேரமும் NHAI வாகனங்கள் ரோந்து செல்லும் என கூறப்படும்போது, கிட்டத்தட்ட 8 மணி நேரம் நசுங்கிய காரை ஏன் அதிகாரிகளால் கவனிக்க முடியவில்லை? உரிய நேரத்தில் உதவி கிடைத்திருந்தால் அவர்கள் உயிர் பிழைத்திருப்பார்கள்,” என்று உயிரிழந்த ராமின் மாமா நஹார் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாலை 12.14 மணிக்கு இரண்டாவது விபத்து நடந்தபோதும், காலை 7.38 மணிக்குத்தான் முதல் தகவல் கிடைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். உதவக் காத்திருந்து இறந்த மகனின் தந்தையின் துயரக் குரல், அதிகாரிகளின் பொறுப்பற்றதனத்தை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளது.