தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், எல்லாரெட்டிப்பேட் மண்டலம், கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரா (45). இவர் தள்ளுவண்டி ஆட்டோ ஓட்டி வந்தார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டில் கோழிக்கறி சமைத்து, மதிய உணவு உண்டபோது துரதிர்ஷ்டவசமாக ஒரு கோழி எலும்பு அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால், அவரால் சுவாசிக்க இயலவில்லை என்றும், சிரமப்பட்டு திணறியதாகவும் கூறப்படுகிறது.
தொண்டையில் எலும்பு சிக்கியதால் சுரேந்திராவுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கொல்லப்பள்ளி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது மரணத்தால் குடும்பமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.
உணவு உண்ணும்போது, உணவுப் பொருள் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுப் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்கெனவே நடந்துள்ளன. மீன் முள் தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தது போன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், உணவு உண்ணும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பேசும்போது, உணவுத் துகள்கள் சுவாசக் குழாய்க்குள் செல்ல வாய்ப்பு உள்ளது. இதைக் கொண்டு உணவு உண்ணும்போது அதிகக் கவனத்துடனும், அவசரமின்றியும் உண்ண வேண்டும் என்று தெரிகிறது.
