உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள கலுவா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ரிங்கு என்ற கட்டுமானத் தொழிலாளி, தனது மனைவி மற்றும் அவரது காதலனால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை, ரிங்குவின் நீண்ட ஆயுளுக்காக மனைவி கர்வா சௌத் விரதம் இருந்த அடுத்த நாளே நடந்தது. ரிங்குவின் மனைவி, தனது காதலன் அஜித்துடன் சேர்ந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டு, அதை விபத்து போலத் தோன்றும்படி செய்தார்.
கொலை நடந்த அன்று, ரிங்குவின் மனைவி, மருத்துவமனையில் தாமதமாகிவிட்டதாகக் கூறி, அவரை பைக்கில் அழைத்து வரச் சொன்னார். அவர்கள் மகளுடன் திரும்பி வரும்போது, ரஃபயத்பூர் கிராமத்தில் ஒரு வேகத்தடை அருகே அஜித் காத்திருந்துள்ளார். திட்டமிட்டபடி, வேகத்தடை அருகே பைக் மெதுவாகும்போது அஜித் ரிங்குவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் மூவரும் விழ சந்தேகம் வராமல் இருக்க, மனைவி தன் கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இது விபத்து என்று நடித்தார். ஆனால் காவல்துறை விசாரணையில், ரிங்குவின் மனைவிக்கும் அஜித்துக்கும் இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதனால், ரிங்கு அஜித்தை சந்தேகித்து, சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன் அடித்து தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த அஜித், ரிங்குவின் மனைவியிடம், “என்னை அல்லது உன் கணவரை தேர்ந்தெடு” என்று கெடு விதித்துள்ளார். மனைவி அஜித்தைத் தேர்ந்தெடுத்து, இருவரும் சேர்ந்து இந்தக் கொலையைத் திட்டமிட்டனர். காவல்துறை, மனைவியையும் அஜித்தையும் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் கைப்பற்றியது. இந்தச் சம்பவம், கர்வா சௌத் விரதத்தின் புனிதத்திற்கு மாறாக நடந்ததால், அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
