உத்தரப் பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததை பொருட்படுத்தாமல், மோட்டார் சைக்கிளில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ஒருவர், ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த விபத்து தாத்ரி பகுதியில் அக்டோபர் 13-ம் தேதி நடந்துள்ளது. தாத்ரியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர், தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கை நெருங்கிய போது, கேட் ஏற்கனவே மூடப்பட்டிருந்தது. ஆனால், அவர் எந்த பயமும், யோசனையும் இல்லாமல், கேட்டின் கீழ் சற்று கீழே வளைந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.

அப்போது, திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அதே சமயம் வேகமாக வந்த ரெயிலை பார்த்ததும், துஷார் தனது பைக்கை தூக்கி வெளியே எடுக்க முயன்றுள்ளார். ஆனால் ரெயில் மிக வேகத்தில் வந்ததால், பைக்கை விட்டுவிட்டு ஓட முயன்ற அவர், ஆனால் அதற்கு முன்னே ரெயில் அவரை மோதியுள்ளது.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தின் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, ரெயில்வே விதிகளை மீறி நடவடிக்கைகள் எடுக்கப்படும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.