ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பலரையும் கவனிக்க வைத்தன. ஆனால், ஆப்கான் மக்களின் இதயங்களில் இந்தியர்களுக்கு என்றும் தனி இடம் உள்ளது. சமீபத்தில், ஒரு இந்திய பயணி ஆப்கானிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது, காபூல் நோக்கி செல்லும் வழியில் ஒரு சோதனைச் சாவடியில் தாலிபான் பாதுகாப்பு வீரரால் நிறுத்தப்பட்டார்.

அந்த வீரர், பயணியிடம் பாஸ்போர்ட் கேட்டபோது, அவர் இந்தியாவிலிருந்து வந்தவர் எனத் தெரிந்ததும், “நீங்கள் இந்தியாவிலிருந்து வந்தவரா? பாஸ்போர்ட் தேவையில்லை, நீங்கள் எங்கள் சகோதரர். கவலையின்றி காபூல் செல்லுங்கள்” என்று கூறி, அவரை மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.

மேலும், அந்த வீரர் அவருக்கு தேநீர் வழங்கவும் முன்வந்தார், ஆனால் பயணி காபூலுக்கு விரைவாக செல்ல வேண்டியிருந்ததால் மறுத்துவிட்டார். “இந்தியா-ஆப்கானிஸ்தான் பந்தம்  நீடித்திருக்கட்டும்” என்று கூறி அந்த தாலிபான் வீரர் அவரை வழியனுப்பினார்.

இந்த சம்பவம், இந்தியர்களை ஆப்கான் மக்கள் எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. 2021 ஆகஸ்டில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்ற பிறகு, தாலிபான் ஆட்சி மீண்டும் தொடங்கியது.

இதனால், இந்தியாவுடனான உறவுகள் தற்காலிகமாக பின்னடைவை சந்தித்தன. ஆனால், சமீப மாதங்களில் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மீண்டும் மேம்பட்டு வருகின்றன.

பல முக்கிய விஷயங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து முன்னேறி வருகின்றன. இந்தியாவில் ஆப்கான் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர், அதேபோல் ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இந்த சம்பவம், இரு நாட்டு மக்களுக்கிடையேயான ஆழமான நட்பையும், பரஸ்பர மரியாதையையும் பறைசாற்றுகிறது.