பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம், புற்றுநோயால் உயிரிழந்த ராணுவ அதிகாரி ஒருவரின் தாயார் சுலோச்சனா வர்மாவிற்கு சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க, 2019-இல் ஆயுதப்படை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி, அதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரி 2009-ஆம் ஆண்டு அரிய வகை புற்றுநோயால் உயிரிழந்திருந்தார். இந்த வழக்கு அண்மையில் நீதிபதிகள் ஹர்சிம்ரன் சிங் சேத்தி மற்றும் விகாஸ் சூரி ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, “புகைபிடிப்பு போன்ற காரணிகளைத் தவிர, ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஏற்படும் அனைத்து வகை புற்றுநோய்களும் சேவையின் போது ஏற்பட்ட மன அழுத்தம், உடல் வாடை ஆகியவற்றால் ஏற்படுகிறது எனக் கருதப்படும்” என்று நீதிபதிகள் முக்கியக் கருத்தை பதிவு செய்தனர்.

மேலும், பணியில் சேர்ந்தபோது முழுமையாக ஆரோக்கியமுடன் இருந்த வீரர், ஆறு ஆண்டுகள் சேவைக்குப் பிறகு நோயால் பாதிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், இது அவரது சேவையின் விளைவு என்பதில் ஐயமில்லை எனத் தீர்மானித்தது.

இதன் அடிப்படையில், நீதிபதிகள் மத்திய அரசின் மனுவை உறுதியாக தள்ளுபடி செய்து, சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகனின் இறப்பு தேதி முதல், சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த தீர்ப்பு, ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொள்ளும் வகையில் வழிகாட்டி தீர்ப்பாக கருதப்படுகிறது.