அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் வசிக்கும் ஒரு நபர், ஆன்லைன் காதல் மோசடியில் சிக்கி, தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் 1.4 மில்லியன் டாலர்கள் (தோராயமாக 11.6 கோடி ரூபாய்) இழந்ததாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த நபர் தனது பெயரை ரகசியமாக வைத்திருந்தாலும், Ashley Madison என்ற டேட்டிங் தளத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்ததாகக் கூறினார். இந்த வலைத்தளம் திருமணமானவர்கள் ரகசிய உறவுகளைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்டது. அந்தப் பெண்ணுடன் பேச்சு வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து, புகைப்படங்கள், வீடியோ அழைப்புகள் என உறவு வளர்ந்தது. தன்னை எரின் என்று அறிமுகப்படுத்திய அந்தப் பெண், கிரிப்டோகரன்சி முதலீட்டைப் பற்றி அவருக்கு அறிமுகப்படுத்தி, தான் இதில் பெரும் லாபம் ஈட்டியதாகவும், அவருக்கும் உதவ முடியும் என்றும் கூறினார். அப்போது அவர் விவாகரத்து செயல்முறையில் இருந்ததால், அவர் இந்தப் பேச்சில் மயங்கினார்.
அந்தப் பெண்ணின் இனிமையான பேச்சாலும் நம்பிக்கையாலும் ஈர்க்கப்பட்ட அவர், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய முடிவு செய்தார். ஆறு வாரங்களில் நான்கு முறை முதலீடு செய்து, மொத்தம் 1.4 மில்லியன் டாலர்களை இழந்தார், இது அவரது ஓய்வு காலத்திற்காக சேமித்த பணமாகும். அவர் கூறுகையில், “ஒரு வாரத்தில் முதல் பணப்பரிமாற்றத்தை செய்துவிட்டேன். எரின் தனது புகைப்படங்கள், வீடியோ அழைப்புகள், வீட்டின் காட்சிகளைப் பகிர்ந்து, தினமும் நேரலையில் பேசினார். எல்லாம் உண்மையாகத் தோன்றியது” என்று கூறினார். ஆனால், அவரது சகோதரி இதைப் பற்றி அறிந்து, உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளச் சொன்னார்.
பின்னர், கொலராடோ விசாரணைப் பணியகத்திற்கு (CBI) இந்த விவகாரம் சென்றது. எரின் தன்னை வெற்றிகரமான தொழிலதிபராகக் காட்டி, முதலீட்டு வரைபடங்கள் மற்றும் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து அவரை ஏமாற்றினார். இந்தப் பணம் ஒரு கோல்ட் ஸ்டோரேஜ் வாலட்டுக்கு மாற்றப்பட்டு, அதை மீட்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த மோசடி அவரை உணர்வுபூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் உடைத்துவிட்டது. இத்தகைய ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க, எந்த முதலீடு அல்லது உறவிலும் அவசரப்பட்டு நம்பாமல், முழுமையாக விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
