டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த பார்க்கிங் பிரச்சினை, கொலையாக முடிந்துள்ளது. பாலிவுட் நடிகை மற்றும் தமிழ் படங்களான ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஹூமா குரேஷியின் சகோதரர் ஆசீஃப் குரேஷி, அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 11 மணியளவில், வேலை முடித்து வீடு திரும்பிய அவர், தனது வீட்டு மெயின் கேட்டில் பக்கத்து வீட்டுக்காரரின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டார். அதை நகர்த்தச் சொல்லியதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் கோபமடைந்த அண்டை வீட்டுக்காரர், ஆசீஃப்பை கூரிய ஆயுதத்தால் தாக்கினார்.

தாக்குதலில் படுகாயமடைந்த ஆசீஃப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ஆசீஃப்பின் மனைவி சாய்னாஸ் போலீசாரிடம் அளித்த தகவலின்படி, பார்க்கிங் தொடர்பான பிரச்சினை இரண்டு குடும்பங்களுக்கும் முன்பிருந்தே இருந்து வந்ததாகவும், சம்பவம் நடந்த இரவு பக்கத்து வீட்டுக்காரர் வாகனத்தை நகர்த்த மறுத்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டி, பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குற்றவாளியை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி, பார்க்கிங் பிரச்சினையில் உயிரிழப்பு நடந்தது குறித்து உள்ளூர் மக்கள் அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டு வருகின்றனர்.