
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நடந்த மனதை உடைக்கும் சம்பவம், மக்கள் மனங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு ஒன்றரை வயது குழந்தை, கோல்கப்பா விற்பனைக்காக பதப்படுத்தப்பட்ட கொதிக்கும் சுண்டல் பானையில் தவறி விழுந்து, உடல் வெந்து பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், அதே குடும்பத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் இதேபோன்று அக்காவும் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரியா என்ற குழந்தை, ஜான்சி பகுதியை சேர்ந்த கோல்கப்பா விற்பனையாளர் சைலேந்திராவின் மகள். கடந்த நான்கு ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் துத்தி என்ற பகுதியைச் சேர்ந்த வீடு ஒன்றில் வாடகைக்கு தங்கியிருக்கிறார். ஜூன் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை, அவரது மனைவி பூஜா, கோல்கப்பா விற்பனைக்கு தேவையான சுண்டலை அடுப்பில் வைத்து வைத்து, குறுகிய வேலைக்காக வெளியே சென்றிருந்தார். அந்த நேரத்தில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த பிரியா, எதிர்பாராதவிதமாக அந்த கொதிக்கும் சுண்டல் பானையில் தலைகீழாக விழுந்துள்ளார்.
குழந்தையின் கதறும் சத்தத்தை கேட்டு விரைந்து வந்த பூஜா, உடனே குழந்தையை வெளியே எடுத்துப் போர்வையில் முடிந்து, அருகிலுள்ள சமுதாய ஆரோக்கிய மையத்துக்கு (CHC) கொண்டு சென்றார். குழந்தையின் நிலைமை மோசமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரை மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால், சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார்.
இதனுடன் இந்த குடும்பத்தின் வேதனை இன்னும் அதிகரிக்கிறது. ஏனெனில், இரண்டு வருடங்களுக்கு முன், இவர்களது மூத்த மகள் சௌம்யா, இதே போன்று, கொதிக்கும் பருப்புத் துண்டியில் விழுந்து உயிரிழந்திருந்தார். தங்களின் இரு குழந்தைகளையும் இழந்த பெற்றோர் தற்போது தீராத வேதனையில் தவிக்கிறார்கள்.
தந்தையான சைலேந்திரா, கண்ணீர் வடித்தபடி கூறுகிறார், “இரண்டு வருடங்களுக்கு முன் என் முதல் மகளை இழந்தேன். இப்போது என் இரண்டாவது மகளும் போனாள். என் வாழ்க்கையே இவங்கதான்… இருவரும் இல்லாததால என் வாழ்க்கையே பாழாகிவிட்டது!” என்றார். இச்சம்பவத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பெற்றோர்களும் அதே நேரத்தில் மயங்கி விழுந்ததாகவும், அக்கம் பக்கத்தினர் வந்து எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்வின் மூலம், வீட்டில் குழந்தைகளை தனியாக விடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதையும், பாதுகாப்பு குறைவால் ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததை யாராலும் ஏற்க முடியாத துயரமாகவும், அனைவரும் சிந்திக்க வேண்டியதாயும் கூறப்படுகிறது.