
ஆந்திராவில் உள்ள பல்நாடு மாவட்டத்தில் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றது. அப்போது மர்மநபர்கள் சிலர் பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்க முயன்றனர். இந்த ரயில் தும்மலச்செருவை அடைந்ததும் ஒரு கும்பல் ரயிலுக்குள் நுழைந்து திருட முயற்சி செய்தது. இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படையினர் உடனடியாக பயணிகளை உஷார் படுத்தினர். இதையடுத்து காவல்துறையினர் வானத்தை நோக்கி 3 குண்டுகளை சுட்டனர். இதனைக் கேட்ட திருடர்கள் கொள்ளையடிக்க கொண்டு வந்த பொருட்களை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.
பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே இயங்கும் கும்பல்கள் சில காலமாக ரயில்களில் கொள்ளையடித்து வருவதாக காவல்துறையினர் சந்தேகித்து இருக்கின்றனர். இந்த கும்பல் ஒரு வார காலத்தில் 2 கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மர்ம நபர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.