
மகாராஷ்டிரா மாநிலம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. தெய்வீக சக்திகள் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி வந்த போலி சாமியார் ஒருவர், பல்வேறு மோசடி மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கிடையே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிரசாத் என்ற தாதா பீம்ராவ் தாம்தார் (29) என்பவர் ஆவார்.
தாதா பீம்ராவ் தம்தார் பாவ்தான் பகுதியில் ஆன்மீக குருவாகத் தன்னை பாவனையாக்கி, குறிப்பாக கருத்தரிக்க சிரமப்படும் பெண்கள் மற்றும் மனச்சோர்வில் இருக்கும் நபர்களிடம் ‘நீங்கள் சில மாதங்களில் இறந்துவிடுவீர்கள்’ என பயமுறுத்தி மனஅழுத்தம் கொடுத்துள்ளார். பின்னர் தானே தீர்வுகொடுக்கக் கூடிய தெய்வீக சக்தியாளர் என தனது முகத்திரையை மெருகேற்றி, பலரிடமும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.
புனித மந்திரச்சாதனைகள் செய்யப்போகிறேன் என கூறி, பக்தர்களை தனிமைப்படுத்தி, அவர்களது மொபைல் போன்களில் ரகசியமாக ‘AirDroid Kid’ என்ற செயலியை நிறுவி விட்டுள்ளார். இதன் மூலம் அவர்களின் கேமரா, மைக்ரோஃபோன், GPS உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தொலைவிலிருந்தே அணுகி அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாபா மீது மேலும் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, சில இளைஞர்கள் “மரணத்தை தவிர்க்க காதலியுடன் அல்லது பாலியல் தொழிலாளியுடன் உறவு கொள்ள வேண்டும்” என பாபா கூறியுள்ளார். மேலும் அவர்களிடம் செல்போன்களை குறிப்பிட்ட கோணங்களில் வைக்க சொல்லி, அந்தரங்க நிகழ்வுகளை நேரடி வீடியோ மூலம் பார்த்தும், பதிவு செய்தும் வைத்துள்ளார். இது போலி பாபாவின் மோசடிகள் எவ்வளவு தீவிரமானது என்பதை வெளிக்கொணர்கிறது.
ஒரு இளம் பக்தர் தனது மொபைல் போன் தொடர்ந்து சூடாகி வருவதை உணர்ந்தார். அதனை நண்பரிடம் கொடுத்ததும், அந்தச் செயலில் சந்தேகத்துக்கிடமான செயலி இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், யாரோ ஒருவர் தொலைபேசியை ரிமோட் மூலம் இயக்குவதுபோல் இருந்தது. பாபா மட்டுமே அந்த போனில் அண்மையில் கைபேசி பயன்படுத்தியிருப்பது நினைவுக்கு வந்ததும், உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேலும் மூன்று பேர் தனித் தனியாக புகார்கள் அளித்தனர்.
தற்போது தாதா பீம்ராவ் தாம்தார் மீது, பாரதிய நியாய் சன்ஹிதா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் சூனியம் தடுப்பு சட்டம் 2013 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.