
சென்னை நெய்ப்பாட்டினை அடுத்த நீலாங்கரை பகுதியில் வீடுகளை லீசுக்கு தருவதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்த நிஷா என்ற பெண் மீது 30க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்த நிஷா, வீடுகளை லீசுக்கு தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை தொகையை வசூலித்துள்ளார். வீடுகள் தரப்படும் என கூறி ஒப்பந்தம் செய்வதற்கான நம்பிக்கையுடன் பணம் பெற்ற பிறகு, அதே வீடு இன்னொரு நபருக்கு தரப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு காண்பிக்கப்பட்ட வீடு மாற்றப்பட்டு வேறொரு வீடு தருவதாகவும் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி, லீஸ் வீட்டில் குடியேறியவர்களிடம் “நாங்கள் தான் இந்த வீட்டு உரிமையாளர்” என கூறி சிலர் நேரில் வந்து வாடகை பணம் கேட்கும் சம்பவங்களும் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நிஷா ஒரே வீட்டை பலரிடம் ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்படுகிறது.
நிஷா மற்றும் அவரது நிறுவனத்தை நம்பி ஏமார்ந்த பலர் தற்போது நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
நிஷா கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்துள்ளதாகவும், மேலும் பலரும் இதுபோன்ற முறையில் ஏமாற்றப்பட்டிருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தற்போது தலைமறைவாக உள்ள நிஷாவை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.