ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளைஞர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரபல மாணவர் தலைவரான தேவேந்திர நாத் மஹதோ, ராஞ்சியில் நடைபெற்ற ‘திரங்கா யாத்ரா’நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றபோது, காவல்துறையினரால் அதிரடியாகத் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் தேசியக் கொடி ஊர்வலத்தில், தேசபக்தியோடு பங்கேற்க முயன்ற ஒரு தலைவரைப் பாதுகாப்பு காரணங்களைக் சுட்டிக்காட்டி தடுப்பது எந்த வகையில் நியாயம் என அவரது ஆதரவாளர்களும் மாணவர்களும் கடும் கொந்தளிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர்களின் உரிமைகளுக்காகவும், நியாயமான வேலைவாய்ப்புக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தேவேந்திர நாத் மஹதோ, கடந்த சில நாட்களாக உணவு உணவாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். உடல்நிலை நலிவுற்ற நிலையிலும், தேசிய உணர்வுக்கு மதிப்பளித்துத் திரங்கா யாத்ராவில் பங்கேற்க அவர் முயன்றபோது, அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காகத் தான் அவரை வழிமறித்ததாகக் காவலத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமைதியான முறையில் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல வந்தவரை ஜனநாயக நாட்டில் இப்படித் தடுப்பது அதிகார துஷ்பிரயோகம் எனப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வரும் நிலையில், அம்மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக இணையத்தில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கூட ஒரு குடிமகனின் உரிமைகள் முடக்கப்படுவதாகக் கூறி நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வரும் நிலையில், தேசியக் கொடி ஊர்வலத்தில் அரங்கேறிய இந்தத் தடுப்புச் சம்பவம், ராஞ்சி நகரில் மாணவர் போராட்டத்தை மேலும் தீவிரமடையச் செய்துள்ளது.

“>