
காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது, இஸ்ரேலின் முக்கிய செய்தி ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ ஒரு அதிரவைக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. அதில், உணவுக்காக வரிசையில் நிற்கும் பொதுமக்கள் மீது கூட துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு கொடுக்கப்பட்டது என இஸ்ரேல் வீரர்கள் நேரடியாக தெரிவித்துள்ளனர்.
‘ஹாரெட்ஸ்’ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த சில இஸ்ரேல் வீரர்கள், “நாங்கள் டாங்கிகளில் இருந்து இயந்திர துப்பாக்கிகள் மூலம் சுட்டோம். கையெறிகுண்டுகளும் வீசினோம். பாலஸ்தீனர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்த எங்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என உதவி தேடி வந்தவர்கள் தான் அதிகமாக இருந்தனர்” எனக் கூறியுள்ளனர்.
GHF (Gaza Humanitarian Foundation) எனப்படும் அமெரிக்காவை சேர்ந்த அமைப்பு, காசா பகுதியில் உணவு, உடை உள்ளிட்ட தேவைகளை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அந்த உதவிகளை பெறுவதற்காக அதிகாலையிலேயே வரிசையில் காத்திருப்பது வழக்கம். பெரும்பாலும் நள்ளிரவு 1 மணிக்கு உணவு விநியோகம் தொடங்கும். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் வீரர்கள் மேலும் கூறியதாவது, “இந்த உணவுத்தர மையம் ஒரு படுகொலை களமாகவே மாறியுள்ளது. மக்கள் அதிகாலையில் கூட்டமாக வருவார்கள். நாங்கள் அவர்களை நோக்கி சுடுவோம். தினமும் குறைந்தது 5 பேர் கொல்லப்படுகின்றனர்” என தெரிவிக்கின்றனர். இவர்களில் சிலர் பெயர் வெளியிடாமல் பேசியுள்ளனர். ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தியதை அவர்கள் எதிர்க்கின்றனர் என கூறியுள்ளனர்.
காசா அரசின் தரவுப்படி, மே மாத இறுதியிலிருந்து இப்போது வரை உணவுக்காக காத்திருந்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 549 ஆகும். மேலும், 4,066 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவங்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் கண்டித்துள்ளார். “GHF உதவிக்காக செயல்படவில்லை, மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அமைப்பாக செயல்படுகிறது” எனக் கூறியுள்ளார். மேலும், மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (Doctors Without Borders) உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள் இது மனிதாபிமான சட்டங்களை மீறும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது அமைச்சர்கள், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். பொதுமக்கள் மீது திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை எனக் கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், “சட்டத்தை மீறியுள்ளதா என்பதை ராணுவ வழக்கறிஞர் விசாரிப்பார்” என தெரிவித்துள்ளது.