
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பகுதியில் சிவக்குமார் (54) என்பவர் வசித்து வருகிறார். சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலையை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார். இதிலையில் இந்த பகுதியில் வசித்து வரும் நாகராஜ் (40) என்ற காய்கறி வியாபாரிக்கு சிவக்குமார் உதவிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நாகராஜ் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியபோது சாமியார் சிவக்குமார், நாகராஜிடம் தனக்கு மதுபானம் வாங்கி வருமாறு பணம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து நாகராஜ் மது வாங்கிக் கொண்டு வந்து சாமியாரிடம் கொடுத்தார். அப்போது சிவக்குமார் நாகராஜிடம் உனக்கு மனநிலை சரியில்லை என வெளியில் பேசுகிறார்கள். எனது வீட்டில் வைத்து உனக்கு ஒரு பரிகார பூஜை செய்கிறேன். அந்த பூஜை செய்தால் உனக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார். இதனை நாகராஜன் நம்பி பூஜைக்கு சரியென்று கூறியுள்ளார்.
பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு நாகராஜனை வீட்டிற்கு அழைத்த சிவகுமார் பூஜையின் போது திருநீர் மற்றும் குங்குமத்தை நாகராஜன் மீது வீசினார். இதையடுத்து திடீரென அங்கு வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜனின் தலை மற்றும் நெற்றியில் குத்தினார். இதனால் அலறி அடித்து வெளியே ஓடிய நாகராஜனை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.