ஹரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், திருமணத்திற்கு புறம்பான உறவில் கர்ப்பம் அடைந்து, சமீபத்தில் வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அவரது கணவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குழந்தையின் அழுகை சத்தம் அக்கம்பக்கத்தினரால் கேட்கப்பட்டாலும், அந்த வீட்டில் நடக்கும் சோகத்தை யாரும் உணரவில்லை. இந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து சில மணி நேரத்திலேயே, தாய் அந்த குழந்தையின் வாயில் சாம்பல் நிரப்பி, தாவணியால் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், குழந்தையின் உடலை பள்ளிப் பையில் அடைத்து வீட்டின் பின்புற கால்நடைத் தொழுவத்தில் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த கொடூரம், அந்த பெண்ணின் மாமியார் அளித்த புகாரின் பேரில் வெளிச்சத்திற்கு வந்தது. தனது மருமகளின் உடல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த மாமியார், சந்தேகம் கொண்டு கேட்டபோது, “ உடல்நலம் சரியில்லை” என கூறியுள்ளார். ஆனால் ஜூன் 11ஆம் தேதி கருக்கலைப்பு செய்யப்படலாம் என்ற சந்தேகத்தில் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன்பின், ஜூன் 12ஆம் தேதி பள்ளிப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் இறந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. பிரசவத்திற்கு உதவியதாகக் கூறப்படும் இரண்டு பெண்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது போலீசார் அந்த பெண்ணின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்து, குழந்தையுடன் உயிரியல் உறவு உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். “அந்த பெண் உடல்நிலை சரியான பிறகு, போலீஸ் காவலில் எடுத்து விரிவான விசாரணை நடக்கும்” என சீகா காவல் நிலைய பொறுப்பாளர் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், திருமண உறவு மற்றும் சமூக ஒழுக்கம் குறித்த முக்கிய விவாதங்களை எழுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.