திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின்  13 வயது மகள் கடந்த மாதம் ஊக்கு எனப்படும் சேப்டி பின்னை வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென விழுங்கி விட்டார். அதன் பிறகு அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதோடு உணவை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டதால் சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது மருத்துவர்கள் வயிற்றில் சேப்டி பின் சிக்கி இருப்பதாக கூறினர். அதற்காக 3 முறை முயற்சிகள் மேற்கொண்டும் அதனை வெளியே எடுக்க முடியவில்லை. அப்போது சிறுமியின்  குடல் பகுதியில் சேப்டி பின் வாய் திறந்ததால் அதனை அகற்ற முடியாது என்று கூறினர். அதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு எண்டோஸ்கோபி மூலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த சேப்டி பின்னை வெளியே எடுத்தனர். அதன் பின் சிறுமியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் போன்று செயல் பட்டு சிறுமியின் வயிற்றில் இருந்த சேப்டி பின்னை அகற்றி சிறுமியை காப்பாற்றியதால் டீன் சுகந்தி ராஜகுமாரி மற்றும் கண்காணிப்பாளர் வீரமணி ஆகியோர் மருத்துவர்களை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.