பீகார் மாநிலம் ஜமுயில் உள்ள சைல்ட் ஹெல்ப்லைன் அலுவலகத்தில் பணிபுரியும் பூஜா பாரதி என்ற பெண் ஆலோசகர், தன்னுடன் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அலுவலகத்தில் மடிக்கணினி வழியாக ஆபாச வீடியோக்கள் பார்ப்பதோடு, உள்ளாடை அணிந்து அலுவலகத்தில் சுற்றி திரிவதாகவும், சாதி அடிப்படையில் அவதூறாக பேசுவதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், இதைப் பற்றி கேட்டதற்காக அந்த பெண்ணை “சமர் சாதியைச் சேர்ந்தவள்” என திட்டியதோடு, விவாகரத்துக்குப் பிறகு தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் அவதூறு பரப்பப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

 

இது பற்றிஅந்தப் பெண் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்த நிலையிலும் கடந்த 6 மாதங்களாக நீதிக்காக காத்திருப்பதாகவும், மன அழுத்தத்தால் தற்கொலைக்கூட செய்ய நினைத்ததாகவும் பூஜா பாரதி கூறியுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் SC/ST காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும், தேசிய பட்டியல் சாதி ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் புகார், சிசிடிவி வீடியோக்கள், ஆதாரங்கள் இருந்தும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகாரிகள் தரப்பில், ‘உர்மிளா’ அமைப்புக்கு புகார் அனுப்பப்பட்டதாகவும், சில ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது போதாது என பூஜா பாரதி வலியுறுத்தி, தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம், வேலைப்பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறை, அவதூறு, சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்துகிறது.