இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிர்மார் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 24 பேரை, அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த மாணவிகள் கூறிய புகார் குறித்து பள்ளியின் பாலியல் தொல்லை தடுப்பு குழுவினர் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில் புகார் அளித்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் அனுபவித்து வந்த பாலியல் தொல்லை பற்றி எதுவும் தெரியாமல் இருந்து வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மாணவிகளின் குற்றச்சாட்டை உறுதி செய்யப்பட்டு இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.