கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது, “தமிழகத்தில் எங்களது கூட்டணியில் எந்த வித ஓட்டையும் இல்லை.

எங்களது கூட்டணியில் ஏதாவது குழப்பம் ஏற்படும் அதனால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கின்றனர். எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் வராது.

எங்களது கூட்டணி சிதறுவதற்கு நெல்லிக்காய் மூட்டை அல்ல; இரும்புக்கோட்டை. கூட்டணிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் வருவது சாதாரணம். அதனை நாங்களே பேசி சரி செய்து கொள்வோம்.

தமிழகத்தில் பாசிச சக்தியோடு இணைந்திருப்பவர்களை தமிழக மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். மேலும் தமிழகத்தில் முருகர் மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? ஏன் நடத்துகிறார்கள்?

இதேபோன்று அயோத்தியில் ராமரை நாடினார்கள். ஆனால் அங்கு பாஜகவை ராமர் கைவிட்டு விட்டார். அவர்கள் மக்களை நம்பி அரசியல் நடத்துவதில்லை, மதத்தை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள் அதுதான் அவர்களது வேலை” என கூறினார்.