சமீபத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து தற்போது ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகளின் லக்கேஜை ஏற்றி வராமல் தரையிறிங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கடந்த ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை பெங்களூரு, சென்னையிலிருந்து வந்த 2 ஏர் இந்தியா பயணிகள் விமானம் பயணிகளின் லக்கேஜ்களை ஏற்றி வராமல் தரையிறங்கியதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

 

அதனால் பயணிகள், ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பயணிகள் தங்களது லக்கேஜ்களை ஏற்றி வராதது குறித்து கோபமாக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊழியர் ஒருவர், பலத்த மழை மற்றும் குறுகிய ஓடுபாதை, அதிக எடை கொண்ட விமானங்கள் என்பதால் பாதுகாப்பு கருதி பயணிகளின் லக்கேஜ்களை விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என பயணிகளிடம் விளக்கி கூறுகிறார்.

மேலும் எடுத்து வரப்படாத அனைத்து லக்கேஜ்களையும் மறுநாள் காலை 8 மணிக்குள் பயணிகளுக்கு வழங்குவதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

மேலும் டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக வாரணாசிக்கு திருப்பி விடப்பட்டது.