பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.

முன்னதாக தனது உறவினர் மகனும் காதலனுமான வாலிபர் பேருந்து நிலையத்தில் அந்த பெண்ணுக்காக காத்துக் கொண்டிருந்தார். அவர் வந்ததும் இருவரும் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை கடந்த உடன் முக கவசம் அணிந்து இருவரையும் பின் தொடர்ந்து வந்த ஒருவர் தன்னை போலீஸ் என கூறி அவர்களிடம் விசாரணை நடத்தினர். இருவரும் காதலர்கள் என்பதை உறுதி செய்த அந்த நபர் வாலிபரை அடித்து விரட்டி விட்டு இளம்பெண்ணை தன்னுடன் இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றார்.

செல்லும் வழியில் பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண் ஏடிஎம் மையத்திலிருந்து 1000 ரூபாய் பணத்தை எடுத்து அந்த நபரிடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதிக்கு சென்றதும் அந்த நபர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததால் இளம்பெண் கூச்சலிட்டார்.

உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுனர் லாரன்ஸ்(36) என்பது தெரியவந்தது.

அவர் தன்னை போலீஸ் என போலியாக அடையாளப்படுத்திக் கொண்டு அத்துமீறியது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே செல்போன் திருட்டு வழக்கு காவல் நிலையத்தில் நிலவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.