
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் மயூரி சசிகாந்த் தேஷ்முக் (31) என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பின் 6 வது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது மைத்துனிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த மயூரி நேற்று மாலை 6:30 மணியளவில் 6 வது மாடியில் இருந்து தனது 6 வயது மகனுடன் கீழே குதித்தார். இதில் தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த மயூரி மற்றும் அவரது மகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலை முடிவிற்கு மைத்துனியின் கொடுமைதான் காரணம் என்று மயூரி கைப்பட எழுதி இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.